நீலகிரி மாவட்டம் உதகையில் 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியில் படித்து வந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ரஜ்னேஷ் குட்டன் என்பவர், வீட்டில் விட்டுவிடுவதாக கூறி மாணவியை காரில் ஏற்றியுள்ளார்.
அவர் மாணவியின் உறவினர் என்றும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டிற்கு செல்லாமல், அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் காரை ஓட்டிச் சென்றார்.
பின்னர் அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். சிறுமி வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த பெற்றோர், அவரை தேடத் தொடங்கினர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து ரஜ்னேஷ் குட்டன் தனது காரில் வெளியே வந்துள்ளார்.
அவரிடம் விசாரித்த போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். அங்கு சிறுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய ரஜ்னேஷ் குட்டம் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
அவர் வனப்பகுதியில் இருந்து தனது காரில் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in