நியூயார்க்:
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி (Silicon Valley) என்றழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணம் ஜாதி பாகுபாடுக்கு எதிராக மசோதா கொண்டு வந்தது. தற்போது அந்த மசோதாவுக்கு கலிபோர்னியா நீதிக் குழு ஆதரவு தெரிவித்திருப்பதால் இந்த சட்டம் விரைவில் அங்கு அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அங்குள்ள சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்றும் அவை கூறி வருகின்றன.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக செல்வோரின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஐடி நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கியதில் இருந்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டு மக்களின் வருகை அங்கு அபரிமிதமாக பெருகியது.
தற்போது அந்நாட்டில் உள்ள ஐடி செக்டார்களில் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். “இந்தியர்களின் மூளையால்தான் அமெரிக்கா வளர்கிறது” என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதும் இதை சுட்டிக்காட்டி தான்.
அமெரிக்காவில் அடிக்கும் ஜாதி நெடி:
இப்படி இந்தியர்களின் ஆதிக்கம் அமெரிக்காவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அங்கு ஜாதிய உணர்வுகளும் வேரூன்றி வளரத் தொடங்கிவிட்டது. வெளிநாடுகளில் இந்தியர்கள் ஜாதிகளை மறந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டு வந்த காலம் மலையேறி, தற்போது அங்கும் ஜாதியின் பெயரால் அந்நியப்பட தொடங்கியுள்ளனர் இந்தியர்கள். அந்நியப்பட்டால் கூட பரவாயில்லை. ஆனால், அங்கும் நவீன தீண்டாமை போன்ற ஜாதி பாகுபாடுகளை சில குறுகிய எணணம் படைத்தவர்கள் திணித்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.
கீழ்த்தரமான ஜாதி பாகுபாடுகள்:
இதில் இந்தியர்கள் மட்டுமல்ல.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தங்கள் ஜாதிய முகத்தை காட்ட தொடங்கி இருக்கிறார்கள். வீடு சொந்தமாக இருந்தால் இந்த ஜாதியினருக்கு மட்டும்தான் வீடு வாடகைக்கு விடப்படும் எனக் கூறுவது, அலுவலகங்களில் உயர் பதவி வகித்தால் சொந்த ஜாதியினர் அல்லது குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே பதவி உயர்வு போன்ற சலுகைகளை, பொறுப்புகளை வழங்குவது, தாழ்த்தப்பட்ட ஜாதியினருடன் ஒன்றாக அமர மறுப்பது போன்ற ஜாதிய பாகுபாடுகள் அங்கு தலைதூக்கி உள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க மசோதா:
குறிப்பாக, ஐடி நிறுவனங்களில் தலைநகரமான கலிபோர்னியா மாகாணத்தில் இந்த ஜாதிய பாகுபாடுகள் அதிக அளவில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, வடக்கு கலிபோர்னியா செனட் உறுப்பினரான ஆயிஷா வஹாப் (ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்) கடந்த மாதம் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
விரைவில் சட்டம்:
அதாவது, அமெரிக்காவில் எப்படி கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினால் தண்டனை கிடைக்கும் சட்டம் இருக்கிறதோ, அதுபோல ஜாதி பாகுபாடு காட்டுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு கலிபோர்னியா செனட் நீதிக்குழுவும் இன்று ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக, இந்த மசோதா விரைவில் சட்ட வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு தொடரலாம்..
அப்படி இந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில், பணியிடங்கள் அல்லது பொது இடங்களில் யாரேனும் ஜாதி பாகுபாடு காட்டினால், அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். இந்த மசோதாவுக்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்துக்களை அழிக்கும் சட்டம் இது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.