சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு மத்தியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. இந்தாண்டு தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதமே வெப்பம் பல இடங்களில் சதமடித்தது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வெப்பம்: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்துள்ளது. அதேநேரம் சில இடங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஈரோட்டில் பதிவாகியுள்ளது. அங்கே அதிகபட்சமாக 101.48 பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேநேரம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கணிசமான இடங்களில் மழையும் பெய்துள்ளது
இதனால் கோடை வெயில் மாநிலத்தில் கணிசமாகக் குறைந்தே இருக்கிறது. மழையைப் பொறுத்தவரை 24 மணி நேரத்தில் தேனி பெரியகுளத்தில் 70 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல கோவை, சின்னக்கல்லார் 60 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. மேலும்,தூத்துக்குடி கயத்தாறு, கோவை வால்பாறை , நாகப்பட்டினம் வேளாங்கண்ணியில் தலா 50 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.
11 மாவட்டங்களில் மழை: இதனிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல வரும் ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.