ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… இதில் என்ன தவறு? அரசின் பதிலுக்காக வெயிட்டிங்- உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் சட்டமானது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடந்திருந்தன. இதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தன. அதில், மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது. ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல.

ரம்மி தடை சட்டத்தை வரவேற்ற சரத்குமார்

Dream 11 நியாபகம் இருக்கா?

திறமைக்கான விளையாட்டு. ஒட்டுமொத்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் மாநில அரசு தடை விதிக்க அதிகாரமில்லை. ஐபிஎல் போட்டிகளுக்கு கூட ’Dream 11’ என்ற விளையாட்டு உள்ளது. நாடு முழுவதும் இது விளையாடப்படுகிறது. இதை எப்படி தடை செய்ய முடியும். சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது. தினசரி மில்லியன் கணக்கில் வர்த்தகம் செய்து வருகிறோம். எனவே தடை சட்டத்தால் நாங்கள் முழுமையாக பாதிக்கப்படுவோம்.

மாநில அரசுக்கு அதிகாரம்

தொழிலை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று குறிப்பிட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பதில் கிடைத்த பிறகே இடைக்கால உத்தரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தமிழக அரசு முன்வைத்த வாதத்தில், பொதுப் பட்டியலில் இருப்பதால் தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. திறமையை விட அதிர்ஷ்டம் மேலோங்கி இருக்கும் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை மரணங்கள்

இதுபோன்ற ஆன்லைன் தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிக்கின்றன. அப்பாவி குடும்பங்களை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே ஆன்லைன் நிறுவனங்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மற்றொரு ஆன்லைன் நிறுவனத்தின் வழக்கறிஞர் வாதிடுகையில், பங்குச்சந்தை இழப்பால் மரணங்கள் ஏற்படுகின்றன. இதைக் காரணம் காட்டி தடை விதிக்க முடியுமா? இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மக்களை காக்க சட்டம்

இல்லையெனில் பல லட்சம் ரூபாய் புழங்கக்கூடிய நிறுவனங்களை மூட வேண்டி வரும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றுவதில் என்ன தவறு? மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக அரசு கூறுகிறது.

6 வாரங்கள் காலக்கெடு

ரம்மியால் ஏற்பட்ட இழப்புகளால் கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அடுத்த 6 வாரங்களில் மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.