சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..!!
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு குறித்து, ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, சேப்பாக்கத்தில் உள்ள சுவாமி சிவனாந்தா சாலையில் இருந்து ஆர்.கே.மடம் வரை 2.9 கி.மீ., நீளமுள்ள பகுதிகள் தூர்வாரவும், தமிழக நீர்வளத் துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்டவை இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, “பக்கிங்ஹாம் கால்வாயில் முதற்கட்டமாக 2.9 கி.மீ., நீளத்தில் மறுசீரமைப்பு பணிகள் துவங்க உள்ளது. கரையோரம் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்கிரீட் மற்றும் குடிசைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் ஏற்கெனவே ஆலோசித்துள்ளோம். அவர்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்குவது குறித்து, ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்படவுள்ளது. மேலும், அவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபின், பக்கிங்ஹாம் கால்வாயில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கரையோரங்களில் மூலிகை செடிகள், மரங்கள், பூச்செடிகள் உள்ளிட்டவை நடப்பட்டு பராமரிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவடைந்தப்பின், மற்ற இடங்களில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.