'பொன்னியின் செல்வன் 2' – அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் நாளை(ஏப்.,28) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. பொதுவாக எந்த ஒரு பெரிய படம் வெளியானாலும் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளை ஆரம்பிப்பார்கள். அடுத்து காலை 8 மணிக்கும் மற்றொரு சிறப்புக் காட்சி நடக்கும்.

பொங்கலுக்கு வெளியான 'துணிவு' படத்திற்கு அதிகாலை காட்சிகளும், 'வாரிசு' படத்திற்கு 8 மணி காட்சிகளும் நடைபெற்றன. ஆனால், அனுமதி பெறாமலேயே அந்தக் காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் கண்டிப்பாக அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், தமிழகத்தில் எந்த ஒரு தியேட்டரிலாவது அனுமதியின்றி அதிகாலை காட்சிகளை நடத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 9 மணி முதல்தான் நாளை இப்படத்தின் காட்சிகள் ஆரம்பமாகின்றன. அதே சமயம் பக்கத்து மாநிலத் தலைநகரான பெங்களூருவில் காலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகின்றன. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இல்லாததால் அது படத்தின் முதல் நாள் வசூலைக் குறைத்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.