நியூடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ அறிவித்தது. ஹர்மன்பிரீத், மந்தனா கிரேடு ஏ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 27), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வருடாந்திர தக்கவைப்பு பட்டியலை அறிவித்தது, இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கிரேடு ஏ பிரிவைத் தக்க வைத்துக் கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) 2022-23 சீசனுக்கான சீனியர் மகளிர் அணிக்கான வருடாந்திர வீரர்களை தக்கவைத்துக்கொள்வதை அறிவித்தது. மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக தொடர்கிறார்.
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தா மற்றும் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேடு ஏ பிரிவைத் தக்கவைத்துள்ளனர். கிரேடு பி பிரிவில் ரேணுகா சிங் தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேக்னா சிங், தேவிகா வைத்யா, சப்பினேனி மேகனா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் கிரேடு சி பிரிவில் இடம்பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2022-23 சீசனுக்கான இந்திய மகளிர் அணிக்கான (மூத்த பெண்கள்) வருடாந்திர ஒப்பந்தங்களை வியாழக்கிழமை (ஏப்ரல் 27)அறிவித்தது” என்று தெரிவித்துள்ளது.
NEWS BCCI announces annual player retainership 2022-23 – Team India (Senior Women). #TeamIndia
More Detailshttps://t.co/C4wPOfi2EF
— BCCI Women (@BCCIWomen) April 27, 2023
இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக, கிரிக்கெட்டில் மகளிர் பங்களிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, பிசிசிஐ ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, கிரிக்கெட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் போட்டிக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அறிவித்தது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பாலின பாகுபாட்டைச் சமாளிப்பதற்கான பிசிசிஐயின் முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிசிசிஐயுடன் ஒப்பந்தத்தில் உள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை நாங்கள் செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
“கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்களது ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும். அதாவது, இந்திய அணியின் கிரிக்கெட்டர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு 15 லட்சம் ரூபாய், ஒரு நாள் போட்டிகளுக்கு 6 லட்சம் ரூபாய், 20 ஓவர் T20I போட்டிகளுக்கு 3 லட்சம்) ரூபாய் ஊதியம் வழங்கப்படும். சமபங்கு ஊதியம் என்பது நமது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் ஆதரவிற்கு நான் அபெக்ஸ் கவுன்சிலுக்கு நன்றி கூறுகிறேன்” என்று அவர் அறிவித்திருந்தார்..
அதேபோல, மகளிர் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு, WPL (Women’s Premier League) தொடக்கமும் நல்ல தொடக்கமாக அமைந்தது.. நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகளிர் ப்ரீமியர் லீக் அறிமுகப் பதிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.