சென்னை: பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்து, விசாரணையை வரும் ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடைமற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விதிகளை அறிவித்த அடுத்த நாள், தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு தடை விதித்து சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆன்லைன் ரம்மியை திறமைக்கான விளையாட்டு என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தமிழக அரசின் தடை சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மியை இந்த சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது. மதுபானமும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதுதான். அதற்காக தமிழக அரசு மதுபானத்துக்கு தடை விதித்துவிட்டதா” என்று வாதிட்டார்.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், “1930-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தில் இணையதளத்தைச் சேர்த்து 2021-ல் கொண்டுவரப்பட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்குப் பதிலாக புதிதாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒட்டுமொத்தமாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை, சூதாட்டமாக கருத முடியாது. அவை அதிர்ஷ்ட விளையாட்டுகள் அல்ல. திறமைக்கான விளையாட்டுகளை முறைப்படுத்த மட்டுமே முடியுமே தவிர, அவற்றுக்கு தடை விதிக்க முடியாது.
தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கும்கூட `ட்ரீம் 11′ என்ற ஆன்லைன் விளையாட்டு உள்ளது. எனவே, தற்போதைய சூழலில் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்றார்.
மற்றொரு ஆன்லைன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “மக்களின் பணத்தைப் பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும்.
பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்பாலும், மரணங்கள் ஏற்படுகின்றன. அதற்காக பங்குச்சந்தை வணிகத்துக்கு தடை விதிக்க முடியுமா?” என்று வாதிட்டார்.
மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை: இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘‘ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் கிடையாது. ஏனெனில், இது மாநிலம் சார்ந்த பிரச்சினை.
மாநில அரசு சட்டம் இயற்றி ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்து விட்டால், அதை வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டிய பொறுப்புதான் மத்திய அரசுக்கு உள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. அந்த குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, “மதுரை அருகே உள்ள எனது ஊரான தேனூரில் இன்றும் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது என்று தடை உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு போன்றவற்றுக்கு தடை உள்ளது. அதுபோலத்தான் இதுவும். சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மரணங்கள், அந்தக் குடும்பங்களின் சூழல் உள்ளிட்ட விபரீதத்தை நன்கு உணர்ந்து, பொதுமக்களைக் காப்பாற்ற தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், மக்கள் நலன்தான் முக்கியம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதிலைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் தற்போதைய சூழலில் பிறப்பிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும்ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.