திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை!
இந்தியாவிலேயே அதிகளவில் பக்தர்கள் படையெடுக்கும் ஸ்தலமாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். வழக்கமான நாள்களிலேயே மக்கள் கூட்டத்தில் நீந்தி தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தகர்கள் கூட்டம் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.
தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம்!
இந்நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில், கோடை கால ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், தலைமை பொறியாளர் நாகேஸ்வர ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேவஸ்தான அதிகாரிகளுக்கு விடுப்பு இல்லை!
அப்போது பேசிய நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, “கோடை காலம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரித்து விட்டது. இந்த நிலை வரும் ஜூலை மாதம் இறுதி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும். தேவைப்பட்டால் திருப்பதியில் உள்ள மேலும் சில கோயில்களில் பணியாற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக திருமலைக்கு வந்து பணியாற்றிட வேண்டும்.
ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகள், முக்கியமாக முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்ன தான மையம், லட்டு பிரசாத விநியோக மையங்களில் அடிக்கடி சென்று மேற்பார்வையிடுதல் அவசியம்.
கூட்ட நெரிசலுக்கு நிரந்தர தீர்வு!
கூடுதல் ஸ்ரீவாரி சேவகர்களை நியமனம் செய்வது அவசியம். கோயிலுக்குள் உள்ள வெள்ளி வாசலுக்கும், தங்க வாசலுக்கும் இடையேதான் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஆகம வல்லுநர்கள், வாஸ்து நிபுணர்கள் கலந்தாலோசித்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சாமானியர்களுக்கு முன்னுரிமை!
கோடையில் சாமானிய பக்தர்கள் அவதிப்படக் கூடாது. சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். காவல்துறையினர் போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.