சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 கடந்த வாரம் 28ம் தேதி வெளியானது.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 500 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், தற்போது ரிலீஸாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
பொன்னியின் செல்வன் 2 முதல் வார வசூல்: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானதை தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸாகியுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், ரஹ்மான், விக்ரம் பிரபு என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளத்துடன் உருவாகியுள்ளது இந்தப் படம். மேலும், முதல் பாகத்தில் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் கடலில் மூழ்குவதாக ட்விஸ்ட் வைத்திருந்தார் மணிரத்னம்.
அதனால், இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் சொல்லப்பட்டது. ஆனால், முதல் பாகத்தை விடவும் பொன்னியின் செல்வன் 2க்கு நெகட்டிவான ஓபனிங் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி மட்டுமே வசூலித்துள்ளது பொன்னியின் செல்வன் 2. முதல் வாரம் மொத்தமாக 150 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முதல் வாரத்தின் கடைசி நாளான நேற்று, உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது பொன்னியின் செல்வன் 2. தமிழ்நாட்டில் 25 முதல் 30 கோடி வரை மட்டுமே கலக்ஷன் செய்துள்ளதாம். ஆனால், பொன்னியின் செல்வன் பார்ட் 1, முதல் வாரத்தில் 230 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் 80 கோடியும், இரண்டாம் நாளில் 70 கோடியும், மூன்றாம் நாளில் 80 கோடியும் வசூலித்து மாஸ் காட்டியது.

ஆனால், பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் 60 முதல் 65 கோடி வரை வசூலித்திருந்தது. இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் மொத்தமே 45 கோடி ரூபாய் தான் கலெக்ஷன் செய்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் 45 முதல் 50 கோடி வரையே வசூல் செய்துள்ளது. அதன்படி மொத்தம் முதல் வாரத்தில் 150 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. இதனால், பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் வசூலில் 80 கோடி வரை வித்தியாசம் காணப்படுகிறது.
வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் 2 கலெக்ஷன் இன்னும் குறையும் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், லைகாவுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதேபோல், கோடை விடுமுறையை முன்னிட்டு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ளதால், பொன்னியின் செல்வன் 2 நிலை இன்னும் மோசமாகும் என்றே சொல்லப்படுகிறது. கல்கியே கன்பியூஸ் ஆகுற அளவிற்கு பொன்னியின் செல்வன் நாவலுக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருப்பதே, ரசிகர்களிடம் வரவேற்பு குறைய காரணம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.