
விஜய் 68ல் அதிரடி மாற்றம், நடந்தது என்ன?
'லியோ' படத்தில் நடித்து வரும் விஜய்யின் அடுத்த படமான அவரது 68வது படம் பற்றிய செய்திகள் கடந்த சில வாரங்களாகவே பரவி வந்து கொண்டிருக்கின்றன. அந்த 68வது படத்தை தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால், திடீரென நேற்று மதியம் முதல் வெங்கட்பிரபு அப்படத்தை இயக்கப் போகிறார் என செய்திகள் பரவின. ஏன் இந்த திடீர் மாற்றம், நடந்தது என்ன என்று கோலிவுட்டில் விசாரித்த போது சில பல தகவல்கள் கிடைத்தது.
ஓரிரு வாரங்களுக்கு முன்பே கோபிசந்த் மல்லினேனி, விஜய் கூட்டணியில் சூப்பர் குட் தயாரிக்க அவரது 68வது படத்திற்கான ஒப்பந்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்குப் பிறகுதான் சூப்பர் குட் ஆர்பி சவுத்ரியின் மகன் நடிகர் ஜீவா கூட இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் படம் பற்றிய அப்டேட் கேட்டதற்கு 'விரைவில்' என்று பதிலளித்திருந்தார். அதனால், விஜய் ரசிகர்களும் அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று விஜய் – வெங்கட்பிரபு இருவரும் இணையும் 'விஜய் 68' என தகவல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு அப்படத்திற்கான ஒப்பந்தம் வேறொரு முன்னணி நிறுவனத்திடம் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் இசையமைப்பாளர் யார், மற்ற நடிகர், நடிகையர் யார் என்று விரைவில் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்க 'வீரசிம்ஹா ரெட்டி' என்ற 100 கோடி படத்தைக் கொடுத்தவர் கோபிசந்த் மல்லினேனி. அவருடன் அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தையும் போட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் அவரை விடுவிக்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அதனால் தான் 'விஜய் 68'ல் இப்படி ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது என கோலிவுட், டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
விஜய் நடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு, ஏன் அறிவிக்கப்பட்டும் கூட சில படங்கள் நடக்காமல் போயிருக்கிறது. அந்த வரிசையில் கோபிசந்த் மல்லினேனி – விஜய் படம் போனாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் சீக்கிரமே இந்த குழப்பத்திற்கு ரசிர்களுக்கு விளக்கமளிப்பது சிறப்பு.
அஜித்தின் 62வது படத்திற்கு வந்த குழப்பம் இப்போது விஜய்யின் 68வது படத்திற்கும் வந்துவிட்டது.