
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் : அரசாங்கத்திடம் சரமாரியான கேள்வி
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் சக்திவேல். தற்போது சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலை மோசமாக இருந்துள்ளது. முன்னால் சென்ற லாரியின் டயர்களில் சிக்கிய கல் ஒன்று சக்திவேலின் கண்ணை தாக்கியுள்ளது. அதில் காயமடைந்த சக்திவேல் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் தான் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'நாங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் போடுகிறீர்கள். ஆனால், சாலை மோசமாக இருக்கிறது. ஹெல்மெட் அணிந்த எனக்கே இப்படி அடி என்றால், ஹெல்மெட் அணியாத நபர்கள் கண்டிப்பாக இறந்திருப்பார்கள். அரசு அதிகாரிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாலை போடாமல் எங்களை கொல்லப் போகிறீர்கள்' என்று கடுமையாக அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.