நல்கொண்டா: அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
சுகுமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
புஷ்பா தி ரூல் என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படப்பிடிப்புக்காக புஷ்பா 2 படக்குழுவினர் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் சிக்கிய புஷ்பா 2: அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2, 400 கோடி வசூலுடன் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து அசத்தியது. அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செம்மரக் கடத்தலை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா தி ரைஸ் வெளியாகும் போதே, இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் புஷ்பா முதல் பாகத்தில் இணைந்த அதே கூட்டணி தான், இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்து வருகிறது. இதில், அல்லு அர்ஜுன் – ஃபஹத் பாசில் இருவருக்குமான காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஃபஹத் பாசில் நடித்த காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் சுகுமார். அதனைத் தொடர்ந்து தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதனை முடித்துவிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் ஒரு பேருந்தில் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நர்கெட்பல்லே என்ற கிராமம் அருகே எதிரே வந்த பேருந்தும் புஷ்பா 2 படக்குழுவினர் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் புஷ்பா 2 படக்குழுவினரில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். மேலும் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனால், தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனிடையே விபத்தில் சிக்கியவர்கள் யார் யார் என்ற விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என கடைசிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் பவன் கல்யாண் நடித்து வரும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து டோலிவுட் திரையுலகம் மீளும் முன்பே தற்போது புஷ்பா 2 படக்குழுவும் விபத்தில் சிக்கியுள்ளது. இதனால், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.