அரிசிக்கொம்பன் யானை ஏற்படுத்திய பாதிப்புகள், சேதங்களை கணக்கெடுக்கிறது அரசு

மதுரை: அரிசிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு விட்டது. அந்த யானையை அடர் வனப் பகுதியான களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலய பகுதியில் விடப்படுகிறது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் ஓய்வு பெற்ற பேராசிரியர் கோபால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மே 27-ல் அரிசிக்கொம்பன் யானை புகுந்து விளை நிலங்களையும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தது. அரிசிகொம்பன் யானையை பரம்பிக்குளம் புலிகள் சரணாலயப் பகுதியில் விடவும், யானையை தொடர்ந்து கண்காணிக்கவும் கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனால் அந்த மாநிலத்தில் அரிசிக்கொம்பனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அரிசிக்கொம்பன் தமிழகத்திற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. அரிசிக் கொம்பன் யானையால் கம்பம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், பாதிப்புகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், அரிசிக்கொம்பன் மீண்டும் தமிழகத்தில் சேதம் ஏற்படுத்தாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியாகவுரி அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், யானைகளின் வலசை பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் அவைகள் ஊருக்குள் நுழைகின்றன என கருத்து தெரிவித்தனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரிசிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அரிசிக் கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுவிட்டது. அந்த யானையை அடர் வனப் பகுதியான களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலய பகுதியில் விடப்படுகிறது என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.