51 மணி நேரம் ஆச்சு… ஒடிசா ரயில் விபத்து தடத்தில் மீண்டும் இயல்பு நிலை… பயணிகள் ரயில் சேவை தொடக்கம்!

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய கோர சம்பவத்தில் 275 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு 288ஆக பலி எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் எண்ணிக்கையில் தவறு நேர்ந்ததாக கூறி இறுதி எண்ணிக்கை 275 என்றே தெரிவிக்கப்பட்டது. இதில் 88 பேரின் உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஒடிசா ரயில் விபத்து

எஞ்சிய உடல்கள் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக புவனேஸ்வர் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களது புகைப்படங்களை இணையத்தில் பதவியேற்றி இந்திய ரயில்வே, ஒடிசா மாநில அரசு ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த விபத்தால் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இலவச பேருந்து சேவை

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் ஒடிசா மாநிலத்திற்குள் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து சேவையை அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. ரயில் பாதை சீரடையும் வரை இலவச சேவை தொடரும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையில் ஒடிசா மாநிலம் ரயில் விபத்து நடந்த பத்ராக் – காரக்பூர் வழித்தடப் பிரிவில் மறுசீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

மீண்டும் ரயில் சேவை

உயர் ஆற்றல் கொண்ட 11 எக்ஸ்காவேட்டர் இயந்திரங்கள், கனரக இயந்திரங்கள் ஆகியவற்றின் துணையுடன் தண்டவாளத்தில் கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. விபத்து ஏற்பட்டு 51 மணி நேரம் ஆன நிலையில் சரக்கு ரயில் சேவையை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி, நேற்று இரவு 10.50 மணிக்கு சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் மெதுவாக இயக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

இதனை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். முன்னதாக ஞாயிறு அன்று நண்பகல் 12 மணியளவில் ரயில் பாதையின் டவுன் லைன் சீரமைக்கப்பட்டது. பின்னர் மாலை 4.45 மணியளவில் அப் லைன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு பகல் பாராமல் பணி

அதன்பிறகு ரயில்வே ஊழியர்கள் முறையாக ஆய்வு செய்தனர். இந்த பணியில் இரவு பகல் பாராமல் 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே சரக்கு ரயில் சோதனை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பயணிகள் ரயில் சேவை

இது வெற்றிகரமாக நடந்த நிலையில், அடுத்தகட்டமாக பயணிகள் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது. இன்று (ஜூன் 5) காலை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. அனைத்து ரயில்களும் இந்த பகுதியில் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமைக்குள் பெரும்பாலான பயணிகள் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.