பிரபல நடிகராகவும் பாஜக பிரமுகராகவும் இருப்பவர் எஸ்வி சேகர். எஸ்வி சேகருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகிறார் எஸ்வி சேகர். மேலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் அண்ணாமலையை விமர்சித்தும் வருகிறார்.
இந்நிலையில் பிராமணர்களுக்காக தனிக்கட்சி தொடங்கப் உள்ளதாக தெரிவித்துள்ளார் எஸ்வி சேகர். இதுதொடர்பாக பேசியுள்ள எஸ்வி சேகர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது என்றும் அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்துதான் இந்த ஜாதிக்கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும் இதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை என்று கூறியுள்ள எஸ்வி சேகர் பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சியில் பல்வேறு பிராமண சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளதாகவும் கட்சிக்கு தலைமை தாங்க தன்னை அழைத்தால் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளதாக கூறியுள்ள எஸ்வி சேகர், பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள் என்றும் அவர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளதாகவும் அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் முறைப்படி பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறிவிட்டுதான் பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.