சேலம் பட்டாசு ஆலை  வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வு

சேலம்: சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருபவர் கந்தசாமி. இவரது ஆலையில் சில தினங்களுக்கு முன்பு நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கி, கந்தசாமியின் மகன் சதீஷ்குமார் (40), நடேசன் (50) மற்றும் பானுமதி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலை (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேலை (36) நேற்று இரவு(சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.