துரத்தி வந்து பழிதீர்த்த பகை.. விழுப்புரத்தில் 2 பயங்கர ரவுடிகள் ஓட ஓட வெட்டிக்கொலை.. பரபர சம்பவம்

விழுப்புரம்:
விட்ட பகை தொட்ட பகை என்பது போல விழுப்புரத்தையும், புதுச்சேரியையும் கலக்கி வந்த 2 பிரபல ரவுடிகள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் அருண் (37), அன்பரசன் (36). நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகளாக வலம் வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் சிறு சிறு அடிதடி, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர்களுக்கு, பின்னர் பெரிய தாதாக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு கீழே இயங்கும் கூலிப்படையில் சேர்ந்த இவர்கள் பல்வேறு கொலைகளை செய்தனர். ஒருகட்டத்தில் புதுச்சேரியில் பெரிய கூலிப்படை தலைவர்களாக அவர் இருவரும் மாறினர்.

பயங்கர ரவுடிகள்:
இதனிடையே, புதுச்சேரியில் மட்டுமல்லாமல் அதன் எல்லையில் இருக்கும் விழுப்புரத்திலும் தங்கள் ரவுடியிசத்தை அருணும், அன்பரசனும் விரிவுப்படுத்தினர். கட்டப்பஞ்சாயத்து, கொலை, கடத்தல் என பல குற்றச்சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற ரவுடிகளே இவர்களை கண்டு பயப்படும் சூழல் ஏற்பட்டது.

ஜாமீன் கையெழுத்து :
இவர்கள் இருவர் மீதும் புதுச்சேரி, விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக நேற்று அவர்கள் வந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஓட ஓட விரட்டி..
இந்நிலையில், செங்கமேடு பகுதி அருகே அவர்கள் வந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. இதையடுத்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளை எடுத்த அந்த கும்பல், அருணையும், அன்பரசனையும் துரத்தியுள்ளது. இதனால் உயிரை காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் ஓடியுள்ளனர். ஆனால் விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அவர்களை மடக்கி சரமாரியாக வெட்டினர்.

பழிதீர்த்த பகை:
இதில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், ரவுடிகள் அருண், அன்பரசன் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இவர்கள் இருவராலும் பாதிக்கப்பட்ட நபர்கள்தான் பகையை தீர்த்துக்கொள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.