உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல முன்னாள் இந்திய அணி வீரர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

‘இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங்தான் தோல்விக்குக் காரணம்’ என சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ‘அஷ்வினை ஏன் அணியில் எடுக்கவில்லை?’ என இந்திய அணியை காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ட்வீட் செய்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டனர். இந்திய அணி ஆட்டத்தில் உயிர்ப்போடு இருக்க முதல் இன்னிங்ஸில் பெரிதாக ஸ்கோர் செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இந்திய வீரர்களால் அதை செய்ய முடியவில்லை.’ எனக் கூறியிருக்கும் சச்சின் அணியில் அஷ்வின் இல்லாதது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
‘இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலரான அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.’
Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 set a solid foundation on Day one itself to tilt the game in their favour. India had to bat big in the first innings to stay in the game, but they couldn’t. There were some good moments…
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2023
திறன்வாய்ந்த ஸ்பின்னர்களால் ஸ்பின்னுக்கு ஏற்ற மைதானங்கள் மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களால் காற்றிலேயே பந்தை நகர்த்த முடியும், மேலும் பிட்ச்சின் பவுன்சை பயன்படுத்தி தந்திரமாக வேரியேஷன்களையும் வீச முடியும். ஆஸ்திரேலிய அணியில் 5 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்திருக்கக்கூடாது. இதை நான் போட்டிக்கு முன்பாகவே கூறியிருந்தேன்.’ என சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருக்கிறார்.
அஷ்வின் அணியில் இல்லாததும் இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக போனது எனும் கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.