தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை புரிந்தது அரசியல் ரீதியாக மிகுந்த கவனம் பெற்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 25 சீட்கள், தமிழர் ஒருவர் பிரதமர், தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கு டார்கெட் போன்ற விஷயங்கள் பேசுபொருளாக மாறின. இதையடுத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர், எப்போதும் கூட்டணியில் தொடர வேண்டும் என எதிர்பார்க்க முடியாது போன்ற பதில்கள் விவாதப் பொருளானது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநிலத் தலைவருக்கு தகுதி இல்லாதவர் தான் அண்ணாமலை. வாய்க்கு வந்த படி பேசுவது. நமது பிரதான எதிரி
. அவர்களை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு தோழமை கட்சியை போய் விமர்சனம் செய்வது நிச்சயம் ஏற்க முடியாது. அண்ணாமலையின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். அவருடைய எண்ணம் என்பது இந்த கூட்டணி தொடரக் கூடாது. பிரதமராக மோடி வரக் கூடாது என்ற நிலையில் செல்வதாக தான் தெரிகிறது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் வைத்தால் அதிமுக 30 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி மேலும் அதிகரித்து 40 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றக்கூடிய நிலை வரும். அண்ணாமலை கர்நாடகாவிற்கு சென்று பிரச்சாரம் செய்தார். இவரது ராசியால் பாஜக தோல்வியை தழுவியது. 40 சதவீத கமிஷன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த அரசை பற்றி பேசுங்கள். எங்களின் மறைந்த தலைவரை பேச வேண்டிய அவசியம் என்ன? 20 ஆண்டுகளாக அவர்களால் சட்டமன்றத்திற்கு போக முடியுமா? எங்களின் தயவால் தான் 4 இடங்களை கைப்பற்றினர். அண்ணாமலையின் போக்கு தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். பாஜகவை நாங்கள் விமர்சனம் செய்கிறோமா? அவர்கள் தான் விமர்சனம் செய்து வருகின்றனர். எல்லை மீறினால் இழப்பு எங்களுக்கு கிடையாது. அதேசமயம் நட்பு ரீதியாக யாரையும் இழக்க தயாராக இல்லை.