மதுவில் இருந்த \"சயனைடு!\" மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்

மயிலாடுதுறை: மதுபானம் குடித்து இருவர் மயிலாடுதுறையில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை வழக்கம் போல 5 மணி வரை வேலை செய்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு: அவர்கள் மயங்கிய நிலையில், கண்டறியப்பட்ட இடத்திற்கு அருகே இரண்டு டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்துள்ளன. அதில் ஒரு பாட்டிலில் பாதி அளவுக்கு மட்டுமே மது இருந்துள்ளது. மற்றொரு பாட்டிலில் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பூர் போலீசார், உயிரிழந்தோரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர் மேலும், சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கே இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மது குடித்த உடன் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு குடும்பப் பிரச்சினை எல்லாம் இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சயனைடு: மேலும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர்கள் குடித்த மதுவில் சயனைடு இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மதுவில் சயனைடு கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்தார். மேலும், அவர்கள் எந்த டாஸ்மாக்கில் மதுவை வாங்கினர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர் வருகின்றனர். சயனைடு கலந்துள்ளதால் அது கொலையா இல்லை தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை சம்பவம்: முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. டாஸ்மாக் திறக்கும் முன்னரே அங்கே பாரில் இருவர் மது வாங்கி குடித்தனர். அதன் பின்னர் சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளி அவர்கள் உயிரிழந்தனர். முதலில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் குடித்த மதுவில் சயனைடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் செய்வோர் பயன்படுத்தும் சயனைடு குடித்து அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த தங்க நகைக்கடைகளிலும் தங்கம் செய்வோரிடமும் விசாரணை நடைபெற்றது.. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.