காந்திநகர்: பைபர்ஜாய் புயல் நாளை குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையில் நாளை (ஜூன் 15) கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக குஜராத் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பைபர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கட்ச், சவுராஷ்டிரா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், மோர்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பைபர்ஜாய் கரையைக் கடக்கும்போது புயல் காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பைபர்ஜாய் புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத்தின் மாண்ட்வி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த சுமார் 37,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துவாரகாவில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த செல்போன் டவர் முன்னெச்சரிக்கையாக இடிக்கப்பட்டது.
குஜராத்தில் வரும் 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பைபர்ஜாய் புயல் காரணமாக 95 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பைபர்ஜாய் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.
“பைபர்ஜாய் புயல் தற்போது மும்பையில் இருந்து விலகி உள்ளது. பைபர்ஜாய் நாளை மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும்” என மும்பை வானிலை ஆய்வு மைய தலைவர் சுனில் காம்ப்ளே தெரிவித்துள்ளார்.
#WATCH | Cyclone #Biparjoy is currently away from Mumbai. #Biparjoy is likely to make landfall between Mandvi and Karachi on 15th June. Heavy rains to occur in Kachchh, Saurashtra in next 24 hours: Sunil Kamble, IMD chief, Mumbai pic.twitter.com/ONnZhTPeFQ
— ANI (@ANI) June 14, 2023