சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் பணியாற்றவிட்டு சென்று பாதியில் விலகிவிட்டதாக நடிகை ஊர்வசி தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவராக இப்போது வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தவர் பல கஷ்டங்களை பார்த்து கிழக்கு சீமையிலே படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
வாலி,குஷி: வசந்த்திடம் மட்டுமின்றி லிவிங்ஸ்டன் ஜேடி&ஜெர்ரி ஆகியோரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு வாலி படத்தை முதல் படமாக இயக்கினார். அஜித், சிம்ரன், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அப்படம் மெகா ஹிட்டானது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து குஷி இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானது. இதன் காரணமாக கோலிவுட்டின் முக்கிய இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
நனவான கனவு: இயக்குநரக வெற்றி பெற்றுவிட்டாலும் கதாநாயகனாக வேண்டும் என்ற கனவு அவரை விட்டு போகவில்லை. அதை நனவாக்கும் விதமாக நியூ படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து அன்பே ஆரூயிரே, இசை உள்ளிட்ட படங்களையும் இயக்கி அவரே நடிக்கவும் செய்தார். இசைக்கு பிறகு படம் எதுவும் இயக்காத அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் நடித்தார்.
கவனம் ஈர்த்த நடிப்பு: இறைவியில் அவரது நடிப்புக்கு கிடைத்த அப்ளாஸ் பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. அந்தவகையில் அவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு வெகுவாக கவர்ந்தது.குறிப்பாக மாநாடு படத்தில் வந்தான் சுட்டான் ரிப்பீட்டு, தலைவரே, போன்ற வசனங்களில் அவரது மாடுலேஷன் அட்டகாசமாக இருக்க சென்சேஷனல் நடிகராக மாறினார்.
பொம்மை: அவர் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், இந்தியன் 2 (அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை), தனுஷின் 50ஆவது படம் என பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இதன் காரணமாக சூர்யாதான் இப்போது மோஸ்ட் வாண்டட் ஆக்டராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஊர்வசி பேட்டி: இந்நிலையில் நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.ஜே.சூர்யா குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர்,”எஸ்.ஜே.சூர்யா எனது தீவிர ரசிகர். என்னை அவர் படத்தில் நடிக்கவைக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் உங்கள் படம் டபுள் மீனிங்காக இருக்கும் என நான் தவிர்த்தேன். ஒருகட்டத்தில் மாமி கேரக்டர் ஒன்றுக்கு (நியூ படத்தில் கிரண்) என்னை டப்பிங் பேச சம்மதிக்க வைத்துவிட்டார். ஸ்டூடியோ சென்று பார்த்தால் வசனம் எல்லாமே டபுள் மீனிங்காக இருந்தது. என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டேன்” என்றார்.