
'அவதார் 3, 4, 5' படங்கள் தள்ளி வைப்பு
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அறிவியில் புனைவுப் படமாக 2009ல் வெளிவந்த படம் 'அவதார்'. அப்படம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் இரண்டாம் பாகமான 'அவதார் – த வே ஆப் வாட்டர்' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்து 2.3 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. இவற்றிற்கடுத்து 'அவதார் 3, 4, 5' என இன்னும் மூன்று பாகங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவற்றின் வெளியீட்டுத் தேதிகளில் மாற்றம் வரலாம் என ஹாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 'அவதார் 3' படம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும், 'அவதார் 4' 2029ம் வருடம் டிசம்பர் மாதத்திற்கும், 'அவதார் 5' 2031ம் வருடம் டிசம்பர் மாதத்திற்கும் தள்ளி வைக்கப்பட உள்ளதாம்.
'அவதார் 3' தள்ளி வைப்பு குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜான் லன்டாவ், “ஒவ்வொரு 'அவதார்' படமும் அற்புதமான, காவியமான முயற்சியாகும். திரைப்படத் தயாரிப்பாளர்களாகிய நாங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் தரமான படத்தைக் கொடுக்கக் கொஞ்சம் கால தாமதமாகும். குழுவினர் கடினமாக உழைத்து வருகிறார்கள். டிசம்பர் 2025 வரை பண்டோராவைக் கொண்டுவர காத்திருக்க முடியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'அவதார் 3' தள்ளிப் போவதால் அடுத்த 4, 5, பாகங்களும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.