காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி.. நீதிமன்ற உத்தரவை அடுத்து பணிகள் தீவிரம்

சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நெஞ்சு வலியால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு இதய அறுவைச சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை ஜூன் 28-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவருக்கான சிறை அறையும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதே சமயத்தில், செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை காவேரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்த பின்னரே, அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியும். எனவே, இன்று இரவுக்குள் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.