சென்னை: நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மதுரையில் நடைபெற்றுவரும் நிலையில், இந்த மாதத்திற்கு படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள டி50 படத்தின் சூட்டிங்கில் தனுஷ் இணையவுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளி ரேசில் பங்கேற்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது கிறிஸ்துமசையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்படம் பீரியட் படமாக 1940ம் காலக்கட்டத்தில் நிகழ்வதாக உருவாக்கப்பட்டு வருகிறது. படம் இருவேறு காலகட்டங்களில் நடப்பதாக காட்டப்படாமல், வரலாற்றுப்படமாக ஒரே காலக்கட்டத்து நிகழ்வை வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடி என்று தன்னை வித்தியாசமாக்கிக் கொண்டார் நடிகர் தனுஷ். மேலும் மற்ற படங்களுக்கு இல்லாத வகையில், இந்தப் படத்திற்காக தொடர்ந்து 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படமாக கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையிலான மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல அடுத்த மாதம் தனுஷ் பிறந்தநாளில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் தற்போது மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று வெவ்வேறு காலகட்டங்களை கூறும் மூன்று பார்ட்களாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 1940களின் காலகட்டத்தை கூறும் வகையில் படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் 1940களில் நடக்கும் நிகழ்வுகளை கூறுவதாகவும் இரண்டாவது பாகத்தில் 1990 கலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறுவதாகவும் மூன்றாவது பாகத்தில் தற்போதைய காலகட்டத்து நிகழ்வுகளை கூறுவதாகவும் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே இதுகுறித்த உண்மை ரசிகர்களுக்கு தெரியவரும். அடுத்த வாரத்தில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த இந்த அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.