4 பேரை பலிகொண்ட கடலூர் கோர விபத்து… கடுமையான தண்டனை வழங்க வேண்டும்… சீமான் ஆவேசம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணத் செய்த 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோரவிபத்தில் சிக்கி 4 பயணிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெறவும் வேண்டுகிறேன். அலட்சியமாகப் பேருந்தை இயக்கி இவ்விபத்து ஏற்பட காரணமானவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளைக் கண்டறிந்து, அதன் ஓட்டுநர்கள் மற்றும் அப்பேருந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தகைய கடும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதையும், அவற்றில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவதையும் தடுக்க முடியும். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாக வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், துயர் துடைப்பு நிதியாக 10 லட்ச ரூபாயும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.