''இந்த ஒரு வெற்றிக்காக தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம்' – நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக் உருக்கம்

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றின் லீக் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் ஆல் ரவுண்டர் லோகன் வான் பீக், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. நிக்கோலஸ் பூரண், 65 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிங் மற்றும் சார்லஸ், அரை சதம் பதிவு செய்தனர். கேப்டனா ஷாய் ஹோப், ப்ரூக்ஸ், கீமோ பால் ஆகியோரும் நேர்த்தியாக ரன் குவித்தனர்.

375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு ஸ்காட் எட்வர்ட்ஸ், 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேஜா நிடமானுரு, சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. அல்சாரி ஜோசப் வீசிய அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 8 ரன்களை எடுத்தது. இரு அணியின் ரன்களும் 374 என சமன் ஆன காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

தேஜா நிடமானுரு சதம் விளாசினாலும், இந்தப் போட்டியில் சூப்பர் ஸ்டாராக இருந்தது என்னவோ, நெதர்லாந்து வீரர் வான் பீக் தான். 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த வான் பீக், சூப்பர் ஓவரில் எட்வர்ட்ஸ் உடன் களமிறங்கினார்.  ஸ்ட்ரைக்கில் இருந்த வான் பீக், ஹோல்டர் வீசிய அந்த ஓவரில் 30 ரன்கள் எடுத்தார். முறையே 4, 6, 4, 6, 6, 4 என பந்தை பவுண்டரிக்கு அவர் விரட்டினார். தொடர்ந்து சூப்பர் ஓவரில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் மூலம் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. அந்த ஓவரை வீசியதும் வான் பீக் தான்.

கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்கள் மனதில் இந்த போட்டி மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. சமூக வலைதளம் முழுவதும் இந்த போட்டி குறித்த பேச்சு வைரலானது. வான் பீக், நெதர்லாந்து அணியின் சூப்பர் மேனாக ஜொலித்தார். இதனிடையே, இந்த வெற்றி குறித்து பேசியுள்ள வான் பீக், “இந்த தருணத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. போட்டியில் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருந்தது. அதற்கேற்ப சில திட்டங்களை வகுத்து செயல்பட்டோம். எட்வர்ட்ஸ் மற்றும் தேஜா இருவரும் பேட்டிங் செய்த விதமும் எங்களின் நம்பிக்கையை அதிகரித்தது. 13-14 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.

இதேபோன்ற தருணங்களில் நிறைய தோல்விகளும் கிடைத்துள்ளன. இதேபோன்ற சூழலில் நாங்கள் இழந்த போட்டிகளின் எண்ணிக்கையைவிட இந்த ஒரு வெற்றி திருப்தி அளிக்க வைக்கிறது. இதேபோல் இன்னொரு வெற்றிபெற இன்னும் 13-14 வருடங்கள் நான் காத்திருக்கவும் தயார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.