"இரு சமூகத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்பு" – மாமன்னன் படத்துக்கு தடை கோரி வழக்கு

மதுரை: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார்.

கடைசியாக இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூலை 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.