பெங்களூர்: ஊட்டிக்கு பைக் ரைடிங் சென்ற நடிகர் விபத்தில் சிக்கி வலது காலை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ். இவர் கன்னட சினிமாவில் ஸ்ரீனிவாச கல்யாணம், சம்பந்திகே சவால்,வசந்த கீதா போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இவர் பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ராஜ்குமாரின் தம்பி ஆவார்.
கன்னட நடிகர்: தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகனான சூரஜ் குமார் சினிமாவில் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்காக தனது பெயரை துருவன் என மாற்றிக்கொண்ட இவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அனூப் ஆண்டனி இயக்கிய இப்படம் சில பிரச்சனையால் வெளியாகவில்லை.
பயங்கர விபத்து: இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பேகுர் அருகே மைசூரு – குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
வலது கால் அகற்றம்: இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துருவனை மீட்டு அருகில் இருந்த மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு மொத்த எலும்பும் உடைந்து சிதைந்துவிட்டதால், துருவனின் வலது காலை அகற்றினால் தான் அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அவரது வலது கால் அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப்பதிவு: இந்த விபத்து குறித்து குண்ட்லுப்பர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரபல நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினரான துருவனை, சிவராஜ்குமார் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.