மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் மீண்டும் வேலை!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் ஜூன் 22ஆம் தேதி முதல் மூடப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கைகளும் தொடர்ச்சியாக எழுகின்றன. இந்நிலையில் படிப்படியாக கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அப்போது மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அரசாணை வெளியிட்டது.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகள், அதிகமாக புகார் வந்த கடைகள் என 500 கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவை ஜூன் 22ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இந்த கடைகளில் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்களின் வேலை வாய்ப்பு குறித்து டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த பணியாளர்கள் கவுன்சிலிங் மூலம் பணியமர்த்தப்பட வேண்டும். ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையில் அருகில் உள்ள கடைகளில் காலி இடங்கள் இருக்கும் பட்சத்தில் பணியமர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.