"விற்பனையே இல்லாத டாஸ்மாக் கடைகளைத்தான் மூடி உள்ளனர்!” – ஆர்.பி.உதயகுமார் தாக்கு

தமிழ்நாட்டில் போதை பொருள் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “போதைப்பொருளை ஒழிக்க தமிழகத்தில் காவல்துறை மூலம் பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல் முறையில் பயன் அளிக்கவில்லை.

ராமேஸ்வரத்தில் ஆளும்கட்சி பிரமுகர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதை மத்திய போதை பொருள் கண்காணிப்பு பிரிவு கண்டுபிடித்தது, ஆனால், அந்த உண்மை வெளியே வரவில்லை.

போதைப்பொருள்

உலக வர்த்தகத்தில் சட்ட விரோத போதைப் பொருட்கள் விற்பனை ஆண்டிற்கு 5 லட்சம் கோடி என்ற அதிர்ச்சி தகவல் நமக்கு கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், பொருளாதர சீரழிவு, குடும்பப் பிரச்னை என சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போதை பொருள் விழிப்புணர்வில் 100 சதவிகிதம் அரசு தோல்வி அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20,014 வழக்குகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25,721 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பதற்கு இத்தகவல் சாட்சியாக உள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத்திறனற்ற, திறமையற்றதாக இந்த அரசு உள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் என்று அரசு கூறுகிறது. எடப்பாடியார் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவால்தான் மூடப்பட்டுள்ளன. அதுவும், விற்பனை இல்லாத கடைகளைத்தான் மூடி உள்ளனர்.

சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் நடந்திருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவாகும். 

தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளால் பாதிப்படைந்துள்ளனர். போதை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் பூஜ்ஜியமாக உள்ளது.

அது மட்டுமல்ல,  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி அரசின் கஜானாவுக்கு செல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது .

போதைப்பொருள்

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சர் கைதியாக இருப்பது வரலாற்றில் புதிதாக உள்ளது.  

இளைய சமுதாயத்தை அரசு காப்பாற்றாது, இளைஞர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் சுனாமி பேரலையாக எழுந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானதுதான்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் அதிகரிக்கும் நிலையில் மக்களைப்பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பீகார் சென்றார். இனிமேலாவது மக்களை பாதுகாக்கும்  நடவடிக்கையில் முதலமைச்சர்  ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்து போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களை பாதுகாப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.