ஐந்து நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் : விவகாரத்து வதந்திகளுக்கு அசின் தந்த பதிலடி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அசின். மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில் சில வட இந்திய, தெலுங்கு ஊடகங்களில் அசின் விவகாரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியிருப்பதாகவும், அதனால் விவகாரத்து செய்கிறாரோ என்றும் செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அசினின் ரசிகர் பக்கம் ஒன்று அந்த செய்திகளை மறுத்திருந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த வதந்தி செய்திகளுக்கு கிண்டலான மறுப்பு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் அசின். “தற்போது எங்களது கோடை விடுமுறையில், ஒருவருக்கொருவர் அருகே அமர்ந்து, எங்களது காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மிகவும் கற்பனையான, எந்தவிதமான ஆதாரமும் இல்லாத 'செய்தி'யைப் பார்த்தோம். வீட்டில் எங்களது குடும்பங்கள் எங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று வந்ததை ஞாபகப்படுத்துகிறது. சீரியசாகச் சொல்கிறேன், வேறு ஏதாவது சிறப்பாகச் செய்யுங்கள்.
இதனால், எங்களது அற்புதமான விடுமுறையில் ஐந்து நிமிடத்தை வீணடித்ததற்கு வருந்துகிறேன். உங்களுக்கு சிறப்பான நாளாக அமையட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.