நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ல் ஏவப்படும்

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்டப் பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி `லேண்டர் கலன்’ தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான `ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து, ஆய்வு செய்துவருகிறது.

இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ல் இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 2-வது வாரம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஜூலை 13-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர்கூறும்போது, “ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் சந்திரயான்-3′ விண்கலம் ஜூலை 13-ம் தேதிவிண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக, சந்திரயான்-3 விண்கலம் கடந்த மே இறுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிக்கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும்.

அதேபோல, கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.