பாகிஸ்தானில் கனமழை: வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நரோவல் மாவட்டத்தில் 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உட்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நரோவல், லாகூர், சினியோட் மற்றும் ஷேக்புரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின்கசிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்கள் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வருகிற 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கவனமாக வாகனம் ஓட்டவும், மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.