மம்தா பானர்ஜிக்கு என்னாச்சு? அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் – நடு வானில் திக் திக்!

மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேற்கு வங்க வட மாவட்டங்களில் இருநாள்கள் பிரச்சாரம் செய்தார், அதைத் தொடர்ந்து அவர் நேற்று மதியம் ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார்.

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை பெய்தது. இதனால் ஹெலிகாப்டரை உடனடியாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டு சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கினர்.

அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜிக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மம்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தனர். மேலும் வீட்டிலிருந்து அவரை சிகிச்சை எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அவர் காரில் ஏறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ள நிலையில் மம்தாவின் உடல்நிலை விரைவில் குணமடைய முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியதால் காயமடைந்துள்ள மாண்புமிகு மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மமதா பேனர்ஜி அவர்களின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறேன். அவர் விரைந்து தேறிட வாழ்த்துவதோடு, மீண்டும் அவர் முழு உடல்நலத்துடன் திரும்ப வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.