வீடியோ காலில் வந்த செந்தில் பாலாஜி… நீதிபதி கேட்ட அந்த கேள்வி… காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டதால் சிக்கல்!

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து விவகாரம், காலை சுற்றிய பாம்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் விடவில்லை. அதுவும் கட்சி மாறி திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் போது கைது நடவடிக்கையில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பொறி வைத்த வருமான வரித்துறை, நேரடியாக காய் நகர்த்திய அமலாக்கத்துறை, நள்ளிரவில் நடந்த கைது என பரபரப்பாக சம்பவங்கள் அரங்கேறின.

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை

இதற்கிடையில் நெஞ்சு வலி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம், பைபாஸ் அறுவை சிகிச்சை என செந்தில் பாலாஜியும் பரபரப்பிற்கு பஞ்சம் வைக்கவில்லை. இன்னும் 3 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்த 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவுக்கு வருகிறது.

அமலாக்கத்துறை விசாரணை

தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதால் அமலாக்கத்துறையால் விசாரிக்க முடியவில்லை. இதையொட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று காரசாரமாக வாதாடியது. ஆனால் மருத்துவமனை சிகிச்சையால் சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இந்த சூழலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி வீடியோ கால் மூலம் ஆஜரானார்.

நீதிபதி அல்லி கேள்வி

அப்போது, எப்படி இருக்கிறீர்கள்? என்று நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, இன்னும் வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார். பின்னர் சில கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனால் செந்தில் பாலாஜிக்கு இன்னும் சிக்கல் தீரவில்லை என்றே தெரிகிறது.

மக்களவை தேர்தல் வியூகம்

எப்படியும் விசாரித்தே தீருவோம் என்ற முனைப்புடன் அமலாக்கத்துறை காணப்படுகிறது. மறுபுறம் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வகையில் காய் நகர்த்தும் வேலைகளில் செந்தில் பாலாஜி தரப்பு ஈடுபட்டுவதாக கூறுகின்றனர். செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட குறி என்பது 2024 மகக்ளவை தேர்தல் நெருங்குவதால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கவே என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

கைகொடுக்கும் ஸ்டாலின்

இதை அறிந்து கொண்ட திமுக தலைமை, செந்தில் பாலாஜிக்கு அனைத்து விதங்களில் உறுதுணையாக இருக்க முடிவு செய்துள்ளது. இத்தகைய நிலை எதுவரை தொடரும்? சிறை செல்வாரா செந்தில் பாலாஜி? இல்லை வழக்கை வேறுபக்கம் திருப்பிவிட்டு எஸ்கேப் ஆவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.