அதெப்படி திமிங்கலம்! தென்கொரிய மக்களுக்கு திடீரென குறைந்த வயது.. காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க

வாஷிங்டன்: தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட போகிறது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஆண்டொன்று சென்றால் வயது கூடும் என்று சொல்வார்கள். சிறு வயதாக இருக்கும் போது வயதை கூட்டி சொல்வதையும் அதையே வயது அதிகமாகி விட்டால் குறைத்து சொல்வதையும் பார்த்து இருப்போம். அதிலும் திருமணம் ஆகாத 90 கிட்ஸ்கள் 30 வயது கடந்துவிட்டால் உண்மையான வயதை சொல்லவே சற்று யோசிப்பார்கள்.

ஆனால், திடீரென உங்களுக்கு ஒரு நாளில் ஒன்றிரண்டு வயது குறைந்தால் என்ன ஆகும்… அது எப்படி சாத்தியம் என்று யோசிக்கீறீர்க்ளா.. அதுதான் தற்போது தென்கொரியாவில் நடைபெற்றுள்ளது. வயது எண்ணிக்கை கணக்கு முறையில் தென்கொரியா கொண்டு வந்து இருக்கும் மாற்றத்தால் இது நடக்க இருக்கிறது. தென்கொரியாவில் வயது கணக்கு முறையில் அப்படி என்ன மாற்றம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பிறகு பார்ப்போம்.

வயது கணக்கிடும் முறை: கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடான தென்கொரியாவில் உலகின் பிற நாடுகளை போல வயது கணக்கிடும் நடைமுறை இல்லை. அதாவது ஒரு குழந்தை பிறந்தது என்றால் அன்றைய தினமே ஒரு வயதாக எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல ஜனவரி 1 ஆம் தேதி ஒரு வயது கூடி விடும். எளிதாக சொல்வது என்றால் புத்தாண்டு முந்தைய தினத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று எடுத்துக் கொண்டால் பிறந்த தினம் ஒரு வயதாகவும், புத்தாண்டு தினமாக ஜனவரி 1 ல் ஒரு வயது என மொத்தம் அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது என்று எடுத்துக் கொள்வார்கள்.

தென்கொரியாவில் 80-90 சதவிகிதம் பேர் அந்த நாட்டு பாரம்பரிய முறையிலான இந்த வயது முறையைதான் பின்பற்றுகின்றனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் முறையை பின்பற்ற தென்கொரிய அரசு முடிவு எடுத்துள்ளது. வயது கணக்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதால் அதை களையும் விதமாக இந்த முறைக்கு மாற தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது.

1 முதல் 2 வயது குறைகிறது: இதன் அடிப்படையில் பார்த்தால் தென்கொரியாவில் பலருக்கும் ஒரு வயது முதல் இரண்டு வயது குறைய இருக்கிறதாம். எனினும், தற்போது கொண்டு வரப்படும் மாற்றத்தால் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட இருக்கிறது. அதாவது பென்ஷன் தாரர்கள் மற்றும் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த வயது எண்ணிக்கையில் குழப்பங்கள் ஏற்பட போகிறது. அதை எப்படி அரசு கையாள போகிறது என்று தெரியவில்லை.

தென்கொரியாவில் பொதுவாக யாரிடமாவது வயது எத்தனை என்று கேட்டால் பிறந்த வருடத்தை தான் சொல்வார்கள். தென்கொரியாவில் கடந்த 1960 ஆம் ஆண்டே சர்வதேச முறையிலான வயது கணக்கிடும் முறை பின்பற்றப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான தென்கொரிய மக்கள் தங்கள் பாரம்பரிய முறையைதான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதம் தென்கொரியாவில் பாரம்பரிய முறையிலான வயது கணகீட்டு முறையை ரத்து செய்து விட்டு சர்வதேச முறையை பின்பற்ற சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.