திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் பழைமையான செளந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்வதற்கான முடிவு செய்யப்பட்டது.
மூலவர் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள், பரிவாரங்கள் ஸ்ரீசௌந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள், கருடாழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளின் கோபுர விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டி, புதிய கோபுர கலசங்கள் அமைக்கப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, யாகசாலை பூஜைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. ஆச்சார்ய வர்ணம், பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனம், வாசுதேவ புண்ணியாக வாசனம் சுதர்சன ஹோமம் ஆகிய பூஜைகளுடன் யாக வேள்விகள் தொடங்கின.
திருக்கோயிலில் அமைந்துள்ள சக்ரத் தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை 1-ம் காலம் மற்றூம் 2-ம் கால வேள்விகளும், செவ்வாய்க்கிழமை 3-ம் காலம் மற்றும் 4-ம் கால வேள்விகளும் நடைபெற்றன.நேற்று முன்தினம் நான்கு கால பூஜைகள் பூர்ணா குதியுடன் நிறைவு பெற்றன.
நேற்று அதிகாலை 5 -ம் கால வேள்வி நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு யாக சாலையிலிருந்து மகா கும்பங்கள் புறப்பாடு நடைபெற்றது. ஆசார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9.45 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தெடார்ந்து, பெருமாள் சந்நிதி, சொர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளிட்ட பரிவார சந்நிதிகள் அமைந்துள்ள கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்வுக்கு திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் முடித்து தீபாரதனைக்குப் பின்னர் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.