பர்கினோ பாசோ நாட்டில் ராணுவத்துடன் பயங்கரவாதிகள் மோதல் – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஓவாகடூகோ,

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினரை கொண்டு நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாம் மாகாணத்தின் நம்சிகுவா பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மறைந்து இருந்து ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

முதலில் தடுமாறிய வீரர்கள் எதிரிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது. இதில் 40 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர சம்பவத்தில் 34 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள இருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.