புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ‘தைனிக் பாஸ்கர்’ ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிக்கை ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசூன் மிஷ்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுவதாகவும், சில தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தது.

மேலும், தமிழகத்தில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தினமும் தாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, விசாரணை செய்த தமிழக காவல் துறை இயக்குநர் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம், அவ்வாறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், 14 பேர் வரை கொலை செய்யப்பட்டதாகவும், திருப்பூரில் சில தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தாக்கப்பட்டதாகவும் நேரடி தகவல்கள் கிடைத்தது.

அதனடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது. மாறாக, தமிழகத்தில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் செய்தி வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதனால், பிஹார் தொழிலாளர்களின் கட்டுரையை வெளியிட்டதற்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என் மீது மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்புத்த உத்தரவில், “ஆவடி காவல் நிலையத்தில் ஒரு வாரமும், திருப்பூர் காவல் நிலையத்தில் ஒரு வாரமும் கையெழுத்திட வேண்டும். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டதாக தைனிக் பாஸ்கர் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும் அதை 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பிரசூன் மிஷ்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.