பெங்களூர்: துண்டுபேப்பர் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இளைஞர் ஒருவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம்?
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.. சில சமயம் விநோதமான, விசித்திரமான, ஈர்க்கக்கூடிய விஷயங்கள் டிரெண்டாகிவிடும்.. அப்படித்தான் பெங்களூர் கோரமங்களாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கார் கண்ணாடி: பெங்களூரு என்றாலே, தொழில்நுட்பம் நிறைந்த மையமாக கருதப்படுகிறது.. இதனால், நாளுக்கு நாள் இந்த நகரத்தின் வளர்ச்சியும் பிரம்மாண்டமாகி கொண்டே போகிறது.. அதேபோல, பலரது வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.. இதுபோன்றவர்கள் தங்கள் வீடுகளில் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், இணையத்தில் ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது.. ஒரு நபர் தன்னுடைய காரை, வழக்கமாக நிறுத்துமிடத்தில் நிறுத்தி வருகிறார். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், இவர் கார் பார்க்கிங் செய்யும் அதே இடத்தில், அவர்களது கார்களையும் பார்க்கிங் செய்து விடுகிறார்களாம். பெரும்பாலும் பார்க்கிங் பிரச்சனை என்றாலே, தகராறில் போய் முடிந்துவிடும்.. ஆனால், இந்த நபர் அப்படி செய்யவில்லை..
துண்டு பேப்பர்: தன்னுடைய இடத்தில் காரை நிறுத்த வேண்டாம் என்று அக்கம்பக்கத்து வீட்டினரிடம் அவர் கேட்டுக் கொண்ட விதம் ஆச்சரியத்தை கிளப்பி உள்ளது. தனது கார் கண்ணாடியில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில், “ஹாய், தயவுசெய்து உங்கள் காரை இங்கே நிறுத்த வேண்டாம்.. இப்படி நிறுத்த வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே உங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்… நாங்கள் 2000ம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில்தான் வசித்து வருகிறோம்.. அதுவுமில்லால் நாங்கள் 2 கார்கள் வைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும். அதனால், எங்களுக்கு போதுமான அளவு, பார்க்கிங் இடம் தேவையாக இருக்கிறது.
தயவுசெய்து, நீங்கள் ஏற்கனவே பார்க்கிங் செய்யப்பட்ட இடத்திலேயே காரை நிறுத்தவும். நாம் எப்போதுமே அன்பான மற்றும் ஆதரவான அக்கம்பக்கத்தினராக இருப்போம்” என்று எழுதி உள்ளார்..
வாழ்த்துக்கள்: ஒரு துண்டு பேப்பரில் இதை எழுதி, அதற்கு கீழே “பக்கத்து வீட்டுக்காரர்” என்று தன்னுடைய கையெழுத்தையும் போட்டு, அவரது கார் கண்ணாடியிலும் ஒட்டிவைத்துவிட்டார். அந்த பேப்பருக்கு நாலாபக்கமும், “செலோ டேப்” போட்டு ஒட்டியும் வைத்துள்ளார்.. இந்த துண்டு பேப்பர்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்..
“பொதுவாக இந்த மாதிரி விஷயங்கள் வன்முறையில்தான் முடிவடையும்.. ஆனால், தனக்கு ஒரு தொந்தரவு என்றாலும்கூட, இவ்வளவு கண்ணியமாக வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாது என்றும், “பெங்களூரு மக்கள் எப்பவுமே ஸ்வீட்தான்” என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதற்கு நடுவில் ஒருவர் வந்து, “இதுவே, குர்கானில் நடந்திருந்தால், பக்கத்து வீட்டுக்காரர் கார் கண்ணாடியை என்றோ மட்டையால் நொறுங்கியிருக்கும்” என்றெல்லாம் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.