புனே: “பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு, மத்திய அரசு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதலில் கொண்டுவரட்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர் வியாழக்கிழை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர் பிரதமர் மோடி அமைதியற்றவராகி விட்டார். எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13-14 தேதிகளில் நடக்க இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூகங்களின் கருத்துகளையும், தேவைகளையும் கேட்டறிந்த பின்னர் பொது சிவில் சட்டம் குறித்த எங்களின் நிலைப்பாட்டினை தெளிவாக விளக்குவோம். அதற்கு முன்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்ட வருகிறது.
பாஜகவால் அதிகாரம் இல்லாமல் வாழ முடியாது. அதைத்தான் 2019-ம் ஆண்டில் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது எடுத்துக்காட்டியது. தேவிந்திர பட்னாவிஸ் முதலில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு அங்கு அமைதியை நிலைநாட்ட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.