மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை(ஜூன் 29) இந்தப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த, 'ஓ.எஸ்.டி., பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், உதயநிதியை கதாநாயகனாக வைத்து, ஏஞ்சல் என்ற படத்துக்கான தயாரிப்பு பணிகள், 2018 ஜூலையில் துவங்கின. 70 நாட்கள் 'கால்ஷீட்' தருவதாக, உதயநிதி ஒப்புக் கொண்டார். தற்போது, 80 சதவீத படப்படிப்பு முடிந்துள்ளது. 13 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மீதி பணிகளை முடிக்க, எட்டு நாட்கள் போதும். அதற்கான கால்ஷீட் உதயநிதி தரவில்லை. அமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட்ட பின், மாமன்னன் படம் தான், தன் கடைசி படம் என கூறியுள்ளார். 'மாமன்னன்' படமும் வெளியாக போகிறது. ஏஞ்சல் படத்துக்கான பணிகளை முடித்து தர, உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடு தரவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

இம்மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன் கடந்த ஜூன் 23ல் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜரானார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் தரப்பில், பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 28க்குள் பதில் அளிக்க, உதயநிதி மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த வழக்கு இன்று(ஜூன் 28) மீண்டும் நீதிபதி குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் ஜெயன்ட் தரப்பில், இந்த படத்தில் உதயநிதி பங்குதாரர் இல்லை. ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி, மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் ‛ஏஞ்சல்' படத்தில் உதயநிதி நடிப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.