பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒ.டி.டி. வெர்ஷனை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இதனைத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்தான் நடத்தி வந்தார். ஆனால் இந்த ஆண்டு சல்மான் கானே நடத்துகிறார். இதில் நடிகர் நவாசுதின் சித்திக் மனைவி ஆலியா சித்திக்கும் கலந்து கொண்டார்.
ஆனால் இந்நிகழ்ச்சி தொடங்கிய சில நாள்களில் ஆலியா சித்திக்கி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன் முன்னாள் கணவர் நவாசுதின் சித்திக்கி குறித்து குற்றம் சாட்டி பேசினார். இதற்கு சல்மான் கான் ஆலியா சித்திக்கை விமர்சித்திருந்தார்.
தற்போது ஆலியா சித்திக் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து அளித்த பேட்டியில், “சல்மான் கான் பாரபட்சமாக நடந்து கொண்டார். எனது கணவரும், சல்மான் கானும் ஒன்றாகப் பணியாற்றி இருக்கின்றனர் என்பதற்காக சல்மான் கான் எனது கணவருக்கு ஆதரவாகப் பேசி என்னிடம் வாக்குவாதம் செய்தார். பூஜா பட்டுமே தனது முந்தைய வாழ்க்கை குறித்துப் பேசினார். ஆனால், சல்மான் கான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சி ஒருவர் தனது அதிகாரத்தை மற்றவர்களுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டும் விதமாக இருந்தது. என்னிடம் தவறு இல்லை என்பதால் இதைச் சொல்ல நான் பயப்படவில்லை. நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்துப் பேசினர். நான் யாருக்கும் எதிராகவும், தவறாகவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
ஆலியா சித்திக்கும் அவரது முன்னாள் கணவர் நவாசுதின் சித்திக்கும் ஒருவருக்கு எதிராக ஒருவர் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
நவாசுதின் சித்திக்கி குழந்தைகளை வெறுப்பதாக ஆலியா தெரிவித்திருந்தார். ஆலியாவையும், குழந்தைகளையும் நவாசுதின் சித்திக்கி தாயார் இரவில் வீட்டை விட்டுத் துரத்தியதாகவும் ஆலியா குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நவாசுதின் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். நவாசுதின் சித்திக்கும், சல்மான் கானும் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.