Maamannan: எதிர்ப்பவர்கள் படம் பார்த்துவிட்டு சந்தோஷப்படுவார்கள்.. மாரி செல்வராஜ் சகோதரர் மகிழ்ச்சி!

சென்னை: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மாமன்னன் படம்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

படத்தின் முதல் பாகம் அதிரடியாக அமைந்துள்ளதாகவும் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எதிர்ப்பவர்களை படம் சந்தோஷப்படுத்தும் என மாரி செல்வராஜ் சகோதரர் பாராட்டு: நடிகர்கள் உதயநிதி வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாவது படமாக மாமன்னன் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற படம் தவறவில்லை.

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் மாமன்னன் படம் வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற புதிய முயற்சிகளில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் அவர், இந்தப் படத்திலும் அதை நிரூபித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவின் திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கனத்தை சிறப்பாக தன்னுடைய தோளில் வடிவேலு சுமந்து செல்கிறார். அவரது நடிப்பிற்கு இந்தப் படம் முக்கியமான சான்றாக அமைந்துள்ளது.

வழக்கம்போல ஃபகத் பாசில் இந்தப் படத்திலும் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. உதயநிதி மற்றும் கீர்த்தியின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றுள்ளன. முதல் பாகம் மற்றும் இடைவேளை காட்சிகள் அதிரடியாக அமைந்துள்ளதாகவும் இரண்டாவது பாகம் கொஞ்சம் ரசிகர்களை கவரத் தவறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்தப் படத்தின் திரைக்கதையையும் மிகவும் நேர்த்தியாக மாரி செல்வராஜ் அமைத்துள்ளார்.

படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லாத போதிலும் சிறப்பாக இருப்பதாகவும் தற்போதைய சூழலுக்கு இந்தப் படம் மிகவும் அவசியமான ஒன்றுதான் என்றும் படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு பல குணசித்திர வேடங்களில் வடிவேலு நடித்திருந்தாலும் அவையெல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்த மாரி செல்வராஜின் சகோதரர், தான் எப்போதும் மாரியின் படத்தை ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவில் சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போதும் படத்தை பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார். உலக ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக மாமன்னன் அமையும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

படத்தை அனைத்து ரசிகர்கள் வரவேற்று கொண்டாடுவார்கள் என்றும் தனக்கும் இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு சந்தோஷப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைப்போலவே பல ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருவதையும் பார்க்க முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.