அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் சரியான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அம்மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கும் தனி கவனம் செலுத்திவருகிறது. இதற்காக வருடத்திற்கு ரூ.189 கோடி செலவிடப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ரூ.35 கோடி செலவில் 146 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அவைகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பழைய பழுதடைந்த ஆம்புலன்ஸ்கள் மற்றும் 2.5 லட்சம் கி.மீட்டருக்கும் அதிகமாக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திரா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 768 ஆக உயர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 531 ஆக இருந்தது. இருப்பினும் அதில் 336 மட்டுமே சரிவர இயங்கக் கூடிய நிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.