ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நர்சிங்கி பகுதியை சேர்ந்த அனுராதா அவரது மகள் மம்தா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் கவிதா ஆகிய 3 பேரும் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டனர்.
சன்சிட்டி பகுதியில் உள்ள சாலையோரம் இன்று காலை 6 மணியளவில் 3 பேரும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, வளைவான சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியது.
இந்த கோர விபத்தில் அனுராதா மற்றும் அவரது மகள் மம்தா தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மற்றொரு பெண்ணான கவிதா படுகாயமடைந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்த பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியா கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.