சென்னை: சென்னை – கதீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து ஜூன் 5-ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தோட்டக்கலை சங்கம் தரப்பில், “விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை எடுத்துள்ளனர். கடந்த 5-ம் தேதி நில நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், “இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில்தான், சம்பந்தப்பட்ட இடத்தை அரசு எடுத்துள்ளது. நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, நிலத்தை அரசு எடுத்தது சரி எனக் கூறி, தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.