தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.

இ.தொ.காவின் சார்பில் அமைச்சருடன், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், கட்சி போஷகர் சிவராஜா, தோட்ட கமிட்டி தலைவர்களும், ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனி சார்பில் அதன் நிறைவேற்று முகாமையாளர் வருண மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தொழில் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட கம்பனிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று தோட்ட நிறுவன சார்பில் அமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.